Tamilnadu

கீழ்ப்பாக்கத்தில் கடத்தப்பட்ட சிறுவன்.. பரபரப்பான சென்னை.. இறுதியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை !

சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் ஷர்மா(வயது42). இவரின் 12 வயது மகன் மிதிலேஷ் குமார் கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் பள்ளி முடிந்தபின்னர் சீனிவாசன் என்பவரின் ஆட்டோவில் வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில், நேற்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது மகன் மிதிலேசை தாக்கி ஆட்டோவில் கடத்திச் சென்றதாகவும் அங்கிருந்து தனது மகன் தப்பித்து வீட்டுக்கு வந்ததாகவும் அரவிந்த் ஷர்மா கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்த செய்தி சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து போலிஸார் சிறுவன் சொன்ன இடத்தில இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். ஆனால் அங்கு சிறுவன் சொன்னபடி எதுவும் நடக்காத நிலையில் போலிஸாரின் சந்தேகம் சிறுவன் பக்கம் திரும்பியது.

அதனைத் தொடர்ந்து சிறுவனிடம் போலிஸார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. மாணவரின் பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்துள்ளது. இதனால் தேர்வுக்கு பயந்த சிறுவன் பள்ளிக்கு செல்லமாட்டேன் என பெற்றோரிடம் அடம்பிடித்த நிலையில், அவனை பள்ளிக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதனால் தன்னை யாரோ கடத்தியாக நடித்தால் பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள் என் கருதிய சிறுவன் திட்டமிட்டு கடத்தல் நாடகம் ஆடியது தற்போது விசாரணையில் வெளிவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனுக்கு எச்சரிக்கை விடுத்த போலிஸார் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Also Read: பறந்துசென்ற கோழி.. பிடிக்கமுயன்று பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி.. மூடநம்பிக்கையால் நேர்ந்த சோகம் !