Tamilnadu

ஆசை ஆசையாக சொந்த ஊருக்குச் செல்லும் போது நடந்த விபத்து - கார் கவிழ்ந்து 2 வயது குழந்தை பரிதாப பலி!

கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (34) இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா மற்றும் குழந்தை சுஷ்மிதாவுடன் சென்னையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக காரில் 3 பேரும் சென்னையில் இருந்து புறப்பட்டு கரூர் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தனர். கார் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மணவாசி டோல்பிளாசா அருகே சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது காரின் கட்டுப்பாடு இழந்ததால் அருகே இருந்த 15 அடி பள்ளத்தில் கார் உருண்டு கவிழ்ந்துள்ளது. இதில் காரில் இருந்து வெளியே தூக்கிய எரியப்பட்ட நிலையில் இரண்டு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே தலையில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

மேலும் படுகாயம் அடைந்த மனைவி மற்றும் தூரத்தில் தூக்கி எரியப்பட்ட குழந்தையை மடியில் தூக்கிப் போட்டுக்கொண்டு அடித்துக்கொண்டு அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அருகில் இருந்த மணவாசி டோல்பிளாசா ஊழியர்கள் கணவன், மனைவி மற்றும் குழந்தை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் அங்கிருந்து குழந்தையின் சடலத்தை போலிஸார் அருகில் உள்ள அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த ஊருக்கு ஆசையாய் சென்ற தம்பதியின் 2 வயது குழந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்” : தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை!