Tamilnadu
மாணவிகளுக்காக “போலீஸ் அக்கா”.. புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய கோவை காவல்துறை.. பொதுமக்கள் வரவேற்பு !
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க “போலீஸ் அக்கா” என்ற புதிய திட்டத்தை கோவை மாநகர காவல்துறை துவங்கியுள்ளது பொதுமக்களிடம் பாராட்டை பெற்றுவருகிறது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக பெண்களுக்கு குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் காணப்படுகிறது. இதனால் காவல்துறை தனது இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்தி வருகின்றன. மேலும் மாணவிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றன.
அதோடு அந்தந்த கல்வி நிறுவனங்களும் இந்த குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் அவசர நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாகத் தமிழகக் காவல்துறை “காவலன் SOS” என்ற ஆப்பை அறிமுகம் செய்தது.
இந்த நிலையில் தற்போது கோவை மாநகர காவல்துறை கல்லூரி மாணவிகளுக்காக “போலீஸ் அக்கா” என்ற திட்டத்தை துவக்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாணவிகள் தங்களுக்கு யாரேனும் தொந்தரவு கொடுத்தால் புகார் தெரிவிக்கலாம். மேலும் அண்மையில் கூட சென்னை பரங்கிமலை இரயில் நிலையத்தில் காதல் விவகாரத்தினால் இளம்பெண் ஒருவரை அவரது காதலன் இரயிலில் தள்ளி கொலை செய்தார். காவல்துறையும் குற்றவாளியை உடனே கைது செய்தது.
எனவே இது போன்று மாணவிகளுக்கு யாரேனும் பாலியல் தொந்தரவோ, அல்லது காதல் தொல்லையோ, பின் தொடர்தலோ உள்ளிட்ட எந்த விவகாரமாக இருந்தாலும் காவல்துறையை எளிய முறையில் அணுகும்படி இந்த திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கமானது, “இந்த திட்டமானது, காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமான உறவை பலப்படுத்தவும், குழந்தைகளை நல்வழிப்படுத்தவும் உதவும். தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு என காவல்துறை ஒரு திட்டம் கொண்டு வருவது இதுவே முதல்முறையாகும்.
இந்த திட்டத்திற்கு கோவையில் செயல்பட்டு வரும் அனைத்து கல்லூரிகளிலும் ஒரு மகளிர் காவலர் தொடர்பு அலுவலர் நியமிக்கப்படுவர். காவல் அதிகாரிகள் சீரான இடைவெளியில் கல்லூரியில் பயிலும் மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்துவர். அந்த கலந்துரையாடலில் மாணவிகளுக்கு ஏற்படும் உளவியல் மற்றும் பாலியல் ரீதியான பிரச்னைகள், கருத்து மோதல்கள், போதைப் பொருட்கள் விற்பனை குறித்தும், அதற்கான தீர்வு, குறித்தும் விவாதிக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் காவல்துறை அதிகாரிகளாக இல்லாமல், மாணவிகளுக்கு ஒரு நல்ல அக்காவாக இருப்பர். மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்தால், மாணவிகளின் தகவல்கள் அனைத்தும் இரகசியமாக பாதுகாக்கப்படும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழிவகுக்கும்” என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
Also Read
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பாஜக அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
”குறையும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்.. பாகுபாடு காட்டும் பாஜக” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!
-
தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பாஜகவின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!