Tamilnadu

’கலகம் செய்ய விடமாட்டேன்’.. அவையில் திட்டமிட்டு அமளி செய்த அ.தி.மு.க-வினரை எச்சரித்த சபாநாயகர்!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாள் நடவடிக்கையில் மறைந்த உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மீண்டும் 2வது நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கேள்வி நேரத்தில் சபாநாயகர் அப்பாவு அமைச்சர் துரைமுருகனைப் பேச அனுமதித்தார்.

அப்போது அ.தி.மு.க-வில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினர் குழப்பத்தை ஏற்படுத்தினர். அவையைத் தொடர்ந்து நடத்த விடாமல் அமளி செய்து கொண்டே இருந்தனர். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, "இந்தி எதிர்ப்பு தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க விருப்பம் இல்லாததால் கலங்கம் செய்ய முயல்கிறீர். இதை அனுமதிக்க முடியாது. உங்களின் இந்த செயல்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமானது.

கேள்வி நேரம் முடிந்த பிறகு பேச அனுமதிக்கப்படும். இப்போது அமர்ந்து கேள்வி நேரத்தை நடத்த விடுங்கள். கலங்கம் பண்ணும் நோக்கத்திலேயே இன்று நீங்கள் அவைக்கு வந்துள்ளீர்கள். இன்றைய அவையில் அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்துப் பேசினால் முந்தைய அ.தி.மு.க ஆட்சியின் அட்டூழியம் தெரிந்துவிடும் என்பதால் திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த பார்க்கிறீர்கள். இதை மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எதற்கோ பயந்து அமளி செய்து கொண்டு இருக்கிறீர்கள். சபை நாகரீகத்துடன் நடந்து கொள்ளாத அ.தி.மு.க-வினரை சபை காவலர்கள் வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டார். சபாநாயகரின் இந்த உத்தரவை அடுத்து அ.தி.மு.க உறுப்பினர்களைச் சபை காவலர்கள் வெளியேற்றினர்.

கலகம் ஏற்படுத்திய அ.தி.மு.க-வினர் இன்று ஒருநாள் மட்டும் பேரவை நிகழ்வில் பங்கேற்ற அனுமதி கிடையாது என சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதையடுத்து கேள்வி நேரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Also Read: “பட்டினி குறியீட்டில் மிகமோசமான இடத்தில் இந்தியா.. பியூஸ் பிடுங்கப்பட்டு கிடக்கும் மோடி ஆட்சி” : முரசொலி!