Tamilnadu

நரபலி தொடர்ந்து அடுத்த பூஜை? : மந்திரவாதத்தில் ஈடுபட்டபோது மயங்கி விழுந்த சிறுவன் - பெண் சாமியார் கைது!

கேரள மாநிலம் பத்தனம் திட்ட மாவட்டத்தில் 2 பெண்களை நரபலி நடத்திய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அம்மாநில அரசு இதுபோல மூடநம்பிக்கைகளை மேற்கொள்ள வற்புறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பொதுமக்களும் சிந்தித்து இதுபோன்ற மோசடி கும்பலின் கைகளில் சிக்கிட வேண்டாம் என வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது இதுபோல குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை பொதுமக்கள் போலிஸாரிடம் பிடித்துக்கொடுத்து, குற்றச்சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்தனம் திட்ட மாவட்டத்தில் மலையாலப்புழா என்ற இடத்தில் சிறுவர்களை மந்திரவாதம் செய்ய பயன்படுத்திய பெண்ணை போலிஸார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் பத்தனம் திட்ட மாவட்டத்தில் மலையாலப்புழாவைச் சேர்ந்தவர் என்ற இடத்தில் வாசந்திமடம் என்ற தேவகி வீட்டில் பூசை செய்து வருகிறார். பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தால் மக்கள் கொதிப்புடம் இருந்த நிலையில், தேவகி வீட்டில் இரண்டு சிறுவர்கள் சென்றுள்ளதை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர்.

நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் தேவகி வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது சிறுவர்களை மந்திரவாதம் செய்ய பயன்படுத்தியது தெரியவந்தது. தட்டிக்கேட்ட அக்கம்பக்கத்தினரை தேவகி மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலிஸார் சம்பவ இடத்திற்குள் வருவதற்குள் அங்கு திரண்ட பொது மக்கள் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தொண்டர்களும் அந்த பெண்ணின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடி உள்ளனர்.

இந்த வீட்டில் இது போன்ற மந்திரவாதம் நடைபெறுவதாகவும், அதில் சிறுவர்களை ஈடுபடுத்தி வருவதாகவும், ஏற்கனவே பல புகார்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது ஒரு சிறுவனை மந்திரவாதத்தில் ஈடுபடுத்துவதும், அப்போது அந்த சிறுவன் மயங்கி விழும் அதிர்ச்சிகர காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல்துறையினர் தேவகியை கைது செய்தனர். நரபலியின் நடுக்கம் மாறும் முன்னே மேலும் அதே மாவட்டத்தில் மூட நம்பிக்கை செயல்கள் அரங்கேறி உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 2 பெண்கள் நரபலி.. பிணத்தை சாப்பிட்ட தம்பதி.. பணக்காரராக வேண்டும் என்ற எண்ணத்தில் அரங்கேறிய கொடூரம் !