Tamilnadu

செல்போனை வாங்கிவிட்டு பணம் அனுப்பியதாக நாடகமாடிய வாலிபர் - போலி பண பரிவர்த்தனை ‘செயலி’ மூலம் நூதன மோசடி!

புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள செல்போன் விற்பனை செய்யும் கடை ஒன்றில், வாலிபர் ஒருவர் புதிய செல்போன் வாங்க வந்தார். அந்த வாலிபர், கடையில் ரூ.18 ஆயிரம் மதிப்பிலான விலையுயர்ந்த செல்போனை வாங்கிக் கொண்டு, பணத்தை 'அமேசான் - பே' மூலம் அனுப்புவதாக கூறினார்.

அதன்படி, தனது மொபைல் போனில் இருந்து பணப்பரிவர்த்தனை 'செயலி' மூலம் ரூ. 18,000 அனுப்பி உள்ளார். ஆனால் கடை உரிமையாளருக்கு பணம் அனுப்பியதற்கான குறுஞ்செய்தியோ அல்லது வங்கி கணக்கில் பணம் சேர்ந்ததற்கான தகவலோ ஏதுவும் வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தார். அதில், அவர் போலி பண பரிவர்த்தனை மொபைல் செயலி மூலம் பணத்தை அனுப்பியதாக நாடகமாடியது தெரிய வந்தது. அதையடுத்து அந்த வாலிபரை ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் போலிஸில் ஒப்படைத்தார்.

தொடர்ந்து போலிஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட வாலிபர் மயிலாடுதுறை, மோழைவூர், மேலவளி பகுதியை பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, 24 என்பதும், இதே பாணியில் பல்வேறு இடங்களில் மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சத்தியமூர்த்தி மீது போலிஸார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: நரபலி தொடர்ந்து அடுத்த பூஜை? : மந்திரவாதத்தில் ஈடுபட்டபோது மயங்கி விழுந்த சிறுவன் - பெண் சாமியார் கைது!