Tamilnadu

அரியலூரில் 90 அடி கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண்.. பூப்பறிக்க சென்ற போது நேர்ந்த சோகம்..

அரியலூர் மாவட்டம் கோக்குடி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் லாரன்ஸ். இவரது மகள் ஹெல்வினா சைனி. (வயது 18). இந்த நிலையில் நேற்றைய முன்தினம் பகல் நேரத்தில், தங்களுக்கு சொந்தமான கொல்லையில் பூப்பறிக்க சென்றுள்ளார் சைனி.

பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், சைனியை, அவரது தந்தை உட்பட உறவினர் அனைவரும் தேடியுள்ளனர். அப்போது அவர்களது கொல்லையின் அருகில் இருந்த ஒரு கிணற்றின் அருகே இளம்பெண்ணின் துப்பட்டா மற்றும் செருப்பு கிடந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இளம்பெண் தவறி விழுந்துவிட்டாரோ என்று எண்ணி கதறி அழுதனர்.

பின்னர் இது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த அதிகாரிகள் நீண்ட நேரம் தேடினர். பின்னர் தொடர்ந்து நேற்றும் தேடியபோது அந்த கிணறு சுமார் 90 அடி ஆழம் வரை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று மணப்பாறையில் இருந்து நீருக்குள் மூழ்கும் கேமரா கொண்டு வரப்பட்டு கிணற்றுக்குள் விடப்பட்டது. அதைதொடர்ந்து 32 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளம்பெண்ணின் உடலை மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்ததாகவும், தற்போது அந்த பெண் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த பெண் தவறி விழுந்தாரா ? அல்லது தற்கொலையா ? அல்லது கொலையா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 2 வயது குழந்தையின் தலையில் விழுந்த TV.. தந்தை கண் எதிரே நடந்த அதிர்ச்சி சம்பவம்!