Tamilnadu
"எந்தக் கொள்கையும் இல்லாததால் உணர்ச்சியில்லாமல் இருக்கும் அதிமுக": தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்!
சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன்சென்டரில்” நடைபெற்று வரும் தி.மு.க பொதுக்குழுவில் 2வது முறையாக ஒருமனதாக மீண்டும் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து சிறப்புரையாற்றிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,"நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதிகளையும் கைப்பற்றுவதன் மூலமாக அகில இந்திய அரசியலில் முக்கியமான சக்தியாக நாம் திகழ வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல்தானே என்று மெத்தனமாக இருந்து விடக் கூடாது. அடுத்து நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் 100 விழுக்காடு வெற்றியை நாம் பெற இதுதான் அடித்தளமாக அமையும் என்பதை மறந்து விட வேண்டாம்.
அடுத்து நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக எதையும் செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தங்களது சாதனைகளாகச் சொல்வதற்கு எதுவும் இல்லாததால் நம்மைப் பற்றிய அவதூறுகள் மூலமாக அரசியல் நடத்தப் பார்க்கிறது பாஜக. மதத்தை, ஆன்மிக உணர்வுகளைத் தூண்டி விட்டு அரசியல் நடத்தப் பார்க்கிறது பாஜக. அரசியலையும் ஆன்மிகத்தையும் எப்போதும் இணைக்காத மக்கள் தமிழ்நாட்டு மக்கள் என்பதால் தமிழ்நாட்டில் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறது பாஜக. அதிமுகவின் கோஷ்டி பூசலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி குளிர்காயப் பார்க்கிறது பாஜக.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கலகலத்துக் கிடக்கிறது அதிமுக. உறுதியான வலிமையான தலைமை அந்தக் கட்சிக்கு அமையாததால் நான்கு பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது அதிமுக. திமுகவை எதிர்ப்பதைத் தவிர வேறு எந்தக் கொள்கையும், எந்தக் காலத்திலும் அதிமுகவுக்கு இருந்தது இல்லை. அதனால் தான் இன்று உணர்ச்சியில்லாமல் கிடக்கிறது.
எந்தக் கட்சியாக இருந்தாலும் தகுதியான தலைமையும் - வலிமையான கொள்கையும் இருந்தால் மட்டும் தான் வெல்லும் என்பதற்கு உதாரணமாக நாம் திகழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
சாதனைகளாக எதையும் சொல்ல முடியாத பாஜகவும் - சரிந்தும் சிதைந்தும் கிடக்கும் அதிமுகவும் - தேர்தல் களத்தில் பொய்ப்பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுவார்கள். தங்களுக்கு சொல்லிக் கொள்வதற்கு எந்தப் பெருமையும் இல்லாததால் நம்மை அவமானப்படுத்தப் பார்ப்பார்கள் " என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!
-
“நலம் காக்கும் ஸ்டாலின் “ திட்டம் : 800 முகாம்கள் - 12,34,908 பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!