Tamilnadu

“இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

அண்ணல் நபிகளாரின் போதனைகளிலிருந்து வழுவாமல் வாழ்ந்துவரும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கும் ஆழமான பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'மீலாதுன் நபி' வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நன்னாளான மீலாதுன் நபித் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!

துயர்மிகு சூழலை இளம் வயதிலேயே எதிர்கொண்டு வளர்ந்து, ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்டுபவராகவும் கருணையின் அடையாளமாக விளங்கினார்.

“கோபம், பொறாமை, புறம் பேசுதல்” ஆகியவற்றை அறவே துறந்து, உயரிய பண்புகளுடன் வாழ்வதற்கான சிந்தனைகளை மனித சமுதாயத்துக்குச் சொன்னவர். “ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்” என்ற மகத்தான மனிதநேயத்திற்குச் சொந்தக்காரர்.

அண்ணல் நபிகளாரின் சீரிய போதனைகளும், சிறந்த அறிவுரைகளும், செழுமையான வழிகாட்டுதல்களும், ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டியவை மட்டுமின்றி, அவை பொன்னேபோல் போற்றி, ஒழுகிப் பாதுகாக்கப்பட வேண்டியவை!

அண்ணல் நபிகளாரின் போதனைகளிலிருந்து வழுவாமல் வாழ்ந்துவரும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கும் ஆழமான பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாய மக்கள் அனைவருக்கும், எனது உளம் கனிந்த மீலாதுன் நபித் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: டிப்டாப் உடை.. ஆண்போல வேடமிட்டு குட்கா கடத்திய இளம் பெண் - சினிமா பாணியில் மடக்கி பிடித்த போலிஸ்!