Tamilnadu

FACT CHECK: பேருந்தில் பெண்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட் தரலாம்?: அமைச்சரின் விளக்கம் என்ன?

தமிழ்நாட்டில் முதலமைச்சராகக் கடந்த மே மாதம் 7ம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றைய தினமே 'பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்' என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பெண்கள் வாழ்க்கையில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இலவச பேருந்து பயணத் திட்டத்தால் இதுவரை 173 கோடி பெண்கள் பயனடைந்து உள்ளனர்.

தி.மு.க அரசின் இந்த மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், பெண்கள் உட்பட பலராலும் பாராட்டப்பட்டது. அதேபோல் பெண்களைத் தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இப்படி எல்லோருக்குமான திராவிட மாடல் அரசாக தி.மு.க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் வேண்டும் என்றே தி.மு.க அரசின் திட்டங்களை விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் அரசு பேருந்தில் "நான் ஓசியில் செல்ல மாட்டேன்" என மூதாட்டி ஒருவர் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த விடியோவை மூதாட்டியை வைத்து அ.தி.மு.க-வின் ஐ.டி விங் எடுத்தது என்ற உண்மை அப்போதே தெரியவந்துள்ளது. இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய விரும்பாத பெண்கள் பணம் கொடுத்து டிக்கெட் பெற்றுச் செல்லலாம் என்று போக்குவரத்துத்துறை அனைத்து நடத்துநர்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவியது.

இதையடுத்து இந்த தகவல் உண்மை இல்லை என்றும் வெறும் வதந்தி என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்துக் கூறிய அமைச்சர் சிவசங்கர், "அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய விரும்பாத பெண்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் என வாய்மொழியாக உத்தரவிட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை. வெறும் வதந்தி" என தெரிவித்துள்ளார்.

Also Read: ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு.. இரங்கல் தெரிவித்து தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!