Tamilnadu
ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு.. இரங்கல் தெரிவித்து தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயம் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களுள் ஒன்றாகும். 'பசிலிக்கா' அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்துக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து வழிபடுவது வழக்கம்.
அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சார்லஸ் (38), அவருடைய தம்பிகள் பிரதிவ்ராஜ் (36), தாவிதுராஜ்(30) ஆகியோர் உள்பட 57 பேரை கொண்ட குழுவினர் பூண்டி மாதா பேராலயத்துக்கு நேற்று ஒரு பேருந்தில் ஆன்மிக சுற்றுலாவாக வந்தனர்.
இவர்கள் நேற்று காலை பூண்டி மாதா பேராலயம் அருகில் உள்ள கொள்ளிடம் செங்கரையூர் பாலம் அருகே பேருந்தை நிறுத்தி விட்டு கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது சார்லஸ், அவருடைய தம்பிகள் பிரதிவ்ராஜ், தாவிதுராஜ் மற்றும் ஹெர்பல், பிரவீன்ராஜ் ஈசாக் ஆகிய ஆறு பேர் ஆற்றில் மூழ்கி பலியானார்கள். இதைத் தொடர்ந்து 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.
இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நேற்று (3.10.2022) காலை சுமார் 9 மணியளவில், ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம். மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த திரு.சார்லஸ் (வயது 38), திரு.பிருத்விராஜ் (வயது 36), திரு.தாவீதுராஜா (வயது 30), திரு.பிரவீன்ராஜ் (வயது 19), திரு.ஈசாக் (வயது 19) மற்றும் செல்வன். அண்டோ கெரிமஸ் ரவி ஆகிய ஆறுபேரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஓசூர் முதல் வேதாரண்யம் வரை... ரூ.317.73 கோடியில் மருத்துவக் கட்டடங்கள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
அடுக்குமாடி தொழில் வளாகம் முதல் பொது வசதி மையங்கள் வரை... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
வாழ்வா? சாவா? ஆட்டம், வீணான கனடா வீரரின் அதிரடி சதம்: சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்த நியூசிலாந்து!
-
மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு ரூ.4000 கோடி நிதி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தது என்ன?
-
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு : இடைக்கால பட்ஜெட் - முக்கிய அம்சங்கள் என்ன?