Tamilnadu

திருச்சி : காணாமல் போன குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட தமிழக காவல்துறை.. பொதுமக்கள் பாராட்டு !

திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் பழைய இபி சாலையை சேர்ந்தவர் முருகன். மூங்கில் கூடை வியாபாரம் செய்து வரும் இவருக்கு 3 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் சிறுவன் நேற்று சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளார்.

இதையறிந்த சிறுவனின் பெற்றோர், பாட்டி உள்ளிட்டோர் தேடி அழைந்தபோது அவர் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே சமயபுரம் பேருந்து நிலையம் பகுதியில் ஆண் குழந்தை ஒன்று தனியாக நின்று அழுதுகொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள், காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து சமயபுரம் காவல் துறையினர் ஸ்ரீரங்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் அங்கு சென்று பார்க்கையில், அது முருகனின் குழந்தை என்று உறுதியானது. பிறகு அந்த குழந்தையை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து காணாமல் போன குழந்தை அங்கே எப்படி போனது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பெண் ஒருவர் இந்த சிறுவனை கூட்டி சென்றது பதிவாகியிருந்தது.

இதைத்தொடர்ந்து சிறுவனை கூட்டி சென்ற அந்த பெண் யார் என்றும், கடத்த முயன்றால் ஏன் அங்கே தனியாக விட்டு சென்றார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: மதுரை : பரோலில் சென்ற கொலை குற்றவாளி தலைமறைவு.. 25 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய சுவாரஸ்ய சம்பவம் !