Tamilnadu

மதுரை : பரோலில் சென்ற கொலை குற்றவாளி தலைமறைவு.. 25 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய சுவாரஸ்ய சம்பவம் !

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு, முத்தாலம்பாறை என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சின்னவெள்ளை. இவர் கடந்த 1982-ம் ஆண்டு நடந்த கொலை சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக கருதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு திண்டுக்கல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 1985-ம் ஆண்டு சின்னவெள்ளை குற்றவாளி அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்பு அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து தனது குடும்பத்தை காண வேண்டும் என்று 1997-ம் ஆண்டு பரோலில் சென்ற இவர், தொடர்ந்து தலைமுறையாக இருந்து வந்துள்ளார். பின்பு அவர் மீது தப்பித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை தேடி வந்தனர். இருப்பினும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் ஆண்டிபட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு தலைமறைவாக இருந்த சின்னவெள்ளையை கடமலைக்குண்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சின்னவெள்ளை தன் ஊர் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பதுங்கி வாழ்வதாக சிறை கண்காணிப்பாளர் வசந்தகண்ணனுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கண்காணித்த அதிகாரிகள்,கைதி சின்னவெள்ளை பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்தனர்.

பின்னர் அங்கு சென்ற அதிகாரிகள் சின்னவெள்ளையை முத்தாலம்பாறை என்ற பகுதியில் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். சின்னவெள்ளை தப்பித்து சென்றபோது அவருக்கு 48 வயது. தற்போது அவருக்கு 73 வயதாகிறது. 48 வயதில் தப்பித்த ஆயுள் தண்டனை சிறைக்கைதி, 25 ஆண்டுகளுக்கு பிறகு 73 வயதில் சிக்கியுள்ள சம்பவம் அந்த பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: லண்டன் தெருக்களிலும் வேலையை காட்டிய வடக்கின் பான்பராக் பிரியர்கள் : வெளிநாட்டில் பறக்கும் இந்திய பெருமை !