Tamilnadu

“தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த ஆட்டோ.. காப்பாற்ற சென்ற லாரி டிரைவர் 2 பேர் பரிதாப பலி” : ஆம்பூரில் சோகம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஆட்டோ திடீரென ஓட்டுனர் கட்டுப்பாட்டு இழந்து தடுப்பு சுவர் மீது மோதியது.

இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஆட்டோ ஓட்டுனர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டிருந்த நிலையில், ஆட்டோ முழுவதும் புகை வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுனர்கள் உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு ஆட்டோவில் சிக்கி உள்ளவரை மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதிவேகமாக வந்த லாரி ஒன்று திடீரென ஆட்டோ மீது மோதி அங்கு காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 லாரி ஓட்டுநர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரி ஓட்டுனர்கள் ராஜா மற்றும் சரவணன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அங்கு மீட்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இரண்டு லாரி ஓட்டுநர் உட்பட அப்பகுதி சேர்ந்த ஒருவர் என 3 பேர் இதில் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் காப்பாற்ற சென்ற போது மேலும் ஒரு விபத்து நடந்து 2 லாரி ஓட்டுனர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “காந்தியை கொலை செய்ததே கோட்சே கும்பல்தான்.. RSS பேரணிக்கு அனுமதி மறுத்தது சரிதான்” : CPIM தலைவர் தாக்கு!