Tamilnadu

மது விருந்திற்கு அனுமதி மறுப்பு.. நட்சத்திர ஓட்டலில் கத்தியுடன் வன்முறையில் ஈடுபட்ட பா.ஜ.க-வினர்!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் இரவில் சிறப்பு நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்கத் தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தம்பதிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இரவு 9 மணியளவில் பா.ஜ.க கொடி கட்டிய 2 கார்களில் 5 இளைஞர்கள் வந்துள்ளனர். இவர்கள் நடன நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றனர். அப்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி என கூறியுள்ளனர்.

அதற்கு அந்த 5 இளைஞர்களும், எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தருகிறோம், எங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என கூறினார்கள். அதற்கும் பாதுகாவலர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதனால் அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ.க-வினர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு பாதுகாவலர்களைத் தாக்க முயன்றனர். அப்போது ஓட்டலில் உள்ள பாதுகாவலர்களும் அவர்களைக் கட்டைகளுடன் தாக்க முயன்றனர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது தகராறில் ஈடுபட்டது பா.ஜ.க சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன், அவருடன் வந்தவர்கள் லட்சுமணன், டேவிட், ஜெரிஷ் என்பதும் தெரியவந்ததது.

இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க-வினரின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்கள் மத்தியில் முகம் சுளிக்கவைத்துள்ளது.

Also Read: பேக்கரி கடையை அடித்து சூறையாடி அராஜகமாக நடந்து கொண்ட இந்து முன்னணி கும்பல்.. 10 பேரை கைது செய்த போலிஸ்!