Tamilnadu

”நாளை 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்”.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தேசிய நலவாழ்வு மையத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இருதய நோய்களுக்கான சிகிச்சை குறித்து, இருதய நோய் வல்லுநர்கள் உடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த, அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1513 சிகிச்சை முறைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.இதில் 8 சிறப்பு உயர் சிகிச்சை முறைகளும், 52 முழுமையான பரிசோதனை முறைகளும் 11 தொடர் சிகிச்சை முறைகளும் அடங்கும்.

இத்திட்டத்தின் கீழ் 937 தனியார் மற்றும் 796 அரசு மருத்துவமனைகள் என ஆக மொத்தம் 1733 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டம் பயன்படுத்துவோர் 37%லிருந்து 48%மாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி முதல் 1166 நபர்கள் H1N1 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 371 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 10 மாதங்களில் 10 நபர்கள் இந்த நோயால் இறந்துள்ளனர்.

காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழக முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள், புறநகர் மருத்துவமனைகள் என மொத்தம் உள்ள 11333 மருத்துவமனைகளில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் சிறப்புக் காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகிறது. இதில் காய்ச்சல், சலி, இருமல் இருந்தால் பொதுமக்கள் இந்த முகாமுக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

Also Read: "படித்த இளைஞர்களுக்கு உலகத்தர திறன்களை வழங்குவோம்.." - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் !