Tamilnadu

பேக்கரி கடையை அடித்து சூறையாடி அராஜகமாக நடந்து கொண்ட இந்து முன்னணி கும்பல்.. 10 பேரை கைது செய்த போலிஸ்!

நீலகிரி மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்திற்கு இந்து முன்னணி மற்றும் பா.ஜ.கவினர் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் இவர்களின் அழைப்பை ஏற்க மறுத்து வியாபாரிகள் இன்று வழக்கம்போல் கடைகளை திறந்தனர்.

இதனால் அத்திரமடைந்த இந்து முன்னணியினர் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பகுதியில் திறக்கப்பட்ட பேக்கரி ஒன்றை இந்து முன்னணியை சேர்ந்த குண்டர்கள் கற்களை வீசி பேக்கரியில் இருந்த கண்ணாடிகளை உடைத்து நாசப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து, சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திற்குச் சென்ற இந்து முன்னணியினர் அங்கு திறக்கப்பட்டு இருந்த கடைகளை அடைக்க சொல்லி ரகளையில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் தெரிந்து பேருந்து நிலையம் வந்த சத்தியமங்கலம் நகர மன்ற தலைவர் ஜானகி, "எதற்காக கடைகளை அடைக்கச் சொல்கிறீர்கள் ? அது வியாபாரிகள் விருப்பம்" என கூறியுள்ளார். அப்போது, இந்து முன்னணியினர் நகர மன்ற தலைவர் ஜானகியை ஒருமையில் பேசி, தகாத வார்த்தைகளால் திட்டியும் அவரை தாக்கவும் முயற்சித்துள்ளனர்.

பிறகு இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார், அராஜகமாக நடந்து கொண்ட இந்து முன்னணியின் ஈரோடு மாவட்ட தலைவர் சக்திவேல் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் சத்தியமங்கலம் நகரப் பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read: மாநில அளவிலான கபடிப் போட்டி.. வீராங்கனைகளுக்கு கழிவறையில் பரிமாறப்பட்ட உணவு.. பாஜக ஆளும் உ.பியின் அவலம் !