Tamilnadu

பைக்கில் செல்லும்போது திடீரென வெடித்த புதிய செல்போன்.. தீப்பிடித்து சிறுவனுக்கு நேர்ந்த சோகம் !

இராணிப்பேட்டை மாவட்டம் கொண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. அந்த பகுதியில் சிறு உணவகம் நடத்தி வரும் இவருக்கு 16 வயதில் 10-ம் வகுப்பு படிக்கும் முத்து என்ற மகன் உள்ளார். செல்போன் கேட்டு அடம்பிடித்த சிறுவன் முத்துவுக்கு, அவரது மாமா கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செல்போன் ஒன்று வாங்கி கொடுத்துள்ளார்.

ரூ.12,000-த்திற்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கொடுத்த இந்த மொபைல் போனை சிறுவன் முத்து பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் அதில் விதவிதமாக புகைப்படம் எடுத்தும் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுவன் முத்து அவரது உறவினர் மனோகரன் என்பவருடன் வாலாஜா ரோடு இரயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சிறுவன் முத்துவின் செல்போனை அவரது பேண்ட் பாக்கட்டில் வைத்திருந்துள்ளார். சிறுவன் பைக் ஒட்டிக்கொண்டிருக்கும் வாணாபாடி அருகே அம்மூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சிறுவனின் மொபைல் போன் வெடித்து அவரது பேண்ட் தீ பிடித்துக்கொண்டது.

இதில் அதிர்ச்சியடைந்த சிறுவன் பைக்கை நிறுத்த முயன்றபோது நேராக ஒரு மரத்தில் பிடித்துவிட்டார். இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு காலில் தீக்காயமும், பைக் விபத்தில் தலையில் இரத்த காயமும் ஏற்பட்டது. மேலும் அவருடன் வந்த மனோகரனுக்கும் இலேசான காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதையடுத்து இந்த சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைனில் ஆர்டர் செய்த ரூ.12,000 மதிப்புடைய செல்போன் வெறும் நான்கே மாதங்களில் வெடித்து சிறுவன் காயமடைந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “அடித்து துன்புறுத்துகிறார்..” : கேரளாவில் வரதட்சனை கொடுமையால் மீண்டும் ஒரு இளம் பெண் தற்கொலை !