Tamilnadu

பரிசளித்த நண்பர்கள்.. மணமேடையிலேயே தேம்பித் தேம்பி அழுத மாப்பிள்ளை: அப்படி என்ன பரிசு அது?

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கீரி பாண்டு - கௌரி தம்பதியரின் மகன் அறிவழகன். இந்நிலையில் தந்தை இழந்த அறிவழகனுக்கும், மதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13-ம் தேதி கோயில் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இருவீட்டாரின் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் வருகை தந்தனர். மணமக்களுக்குப் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கொடுத்து உறவினர்களும், மற்றவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில், உயிரிழந்த தந்தை மீது அதீத பாசம் வைத்துள்ள அறிவழகனுக்கு, வித்தியாசமான முறையில் பரிசு அளிக்க அவரது நண்பர்கள் விரும்பினர்.

அதன்படி, அறிவழகனின் தந்தையின் உருவப் படத்தைப் பேனரில் அச்சடித்து, அதனை சிறிய கட் அவுட்டாக வடிவமைத்து மாப்பிள்ளைக்குப் பரிசாக வழங்கினர். சிறிய கட் அவுட் வடிவில் தந்தையின் உருவப் படத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்ட மாப்பிள்ளை அறிவழகன், திடீரென தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். இதனைச் சற்றும் எதிர்பாராத பரிசு அளித்த நண்பர்கள், அவரை சமாதானம் செய்தனர்.

தற்போது புதுமாப்பிள்ளை தந்தையின் உருவப்படத்தைப் பார்த்து அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த அனைவரும் மகன் தந்தை மீது வைத்துள்ள பாசத்தை கண்டு நெகிழ்ந்து வருகின்றனர்.

Also Read: "கலைஞர் போன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றுகிறார்" - அதிமுக MLA புகழாரம் !