Tamilnadu

உணவகம் அடித்து உடைப்பு.. பணியாளர்களை தாக்கிய இந்து முன்னணி அமைப்பினர் அதிரடி கைது !

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை கண்ணார்பாளையம் நால்ரோடு பகுதியில் பிரபாகரன் என்பவர் புதியதாக உணவகம் ஒன்றினை திறக்க திட்டமிட்டுள்ளார். பெரியாரின் மீது கொண்ட பற்று காரணமாக தனது உணவகத்துக்கு தந்தை பெரியார் உணவகம் என்று பெயரிட்டுள்ளார்.

அதன் திறப்பு விழா இன்று நடைபெறவிருந்த நிலையில், உணவகத்தின் பணியாளர்களான நாகராணி (38). அவரது மகன் அருண் (20) ஆகிய இருவரும் அதற்காக ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.

அப்போது திடீரென கடைக்குள் நுழைந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர், இந்த பகுதியில் தந்தை பெரியார் என்ற பெயரில் உணவகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உணவகத்தின் பணியாளர்கள் நாகராணி மற்றும் அவரது மகன் அருணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பணியாளர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் இந்த தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரில் 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ரவிபாரதி (39), பிரபு (27), சுனில்

என்கிற சதீஷ்குமார் (32), சரவணக்குமார் (30), விஜயகுமார் (26) என்பது தெரியவந்தது. இவ்ர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகம் செய்தல், ஆபாசமாக பேசுதல், அத்துமீறல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: சிறிய தவறால் வீணாய் போன 20 வருட அனுபவம்.. ராஜநாகத்தால் பாம்பு மனிதருக்கு நேர்ந்த சோகம் !