Tamilnadu

”போதைப் பொருட்களின் கூடாரமாக செயல்படும் குஜராத்”.. அமைச்சர் பொன்முடி பரபரப்பு குற்றச்சாட்டு!

போதைப் பொருட்களைத் தடுக்க மாநில அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி," காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாட்டில் போதை பழக்கத்தைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

போதைப் பொருட்களைத் தடுக்க மாநில அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜராத் மாநிலத்தில்தான் அதிக அளவில் போதைப் பொருள்கள் கிடைக்கிறது.

குஜராத்தில் துறை முகம் தனியார் மயமானதை அடுத்து போதைப் பொருள் கடத்தல் வேகமாக நடக்கிறது. குஜராத்தில் உள்ள தனியார் துறைமுகம் வழியாகத்தான் போதைப் பொருள் அதிகம் கடத்தப்படுகிறது. எனவே போதைப் பொருள்களை தடுக்க ஒன்றிய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜயவாடாவில் உள்ள துறைமுகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் போதைப் பொருள்கள் வருகிறது. இதனை ஒன்றிய அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றிய அரசு போதைப் பொருள்களைத் தடை செய்ய முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போதைப் பொருள் கடத்தலில் யாரெல்லாம் உள்ளனர் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய முக்கிய தகவல்!