Tamilnadu

7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. உ.பி-யை சேர்ந்த தாயின் 2-வது கணவர் செய்த கொடுமை !

ஒடிசாவை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர், தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 7 வயது மகளுடன் தனியே வாழ்ந்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மகேஷ் குமார் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரும் தனியே வாழ முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சென்னைக்கு வந்த இவர்கள், பெரும்பாக்கம் பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இங்கு மகேஷ் குமார் கட்டுமான பணி செய்து வரும் நிலையில், அந்த பெண் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் வழக்கம்போல் அந்த பெண் தனது 7 வயது மகளை வீட்டில் தனியே விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் சிறுமிக்கு மகேஷ் குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளார். இதை தாயிடம் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் உள்ளார்.

பின்னர் மாலை வேலை முடிந்ததும் வீடு திரும்பிய தாய், குழந்தை அழுவதை கண்டு ஏன் என்று கேள்விகேட்டுள்ளார். அவரும் வயிறு வலி என்று கூற உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சோதனை செய்த மருத்துவர்கள் சிறுமியின் பிறப்புறுப்பில் காயம் இருப்பதை கண்டனர்.

இதையடுத்து இது குறித்து சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மருத்துவர்கள் தகவலளிக்கவே, அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தாயிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது குழந்தையை தனது 2-வது கணவர் மகேஷ்குமாரிடம் விட்டுவிட்டு வேலைக்கு சென்றதாகவும், வந்து பார்க்கையில் சிறுமி அழுது கொண்டிருந்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையடுத்து தாயின் 2-வது கணவர் மகேஷ்குமாரை பிடித்து விசாரிக்கையில், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர்மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல் அதிகாரிகள், அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு இப்போது வாய்கிழிய பேசுகிறார்" -பழனிசாமிக்கு பதிலடி