Tamilnadu

'1 லிட்டர் பெட்ரோல் 1 ரூபாயா?' -பெட்ரோல் பங்க்கில் குவிந்த வாகன ஓட்டிகள்..அடுத்து நடந்ததுதான் வேற லெவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொன்னாக்குடியில் மெர்சி ராஜன் என்பவர் பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்துள்ளார். இவர் தனது கணவரின் நினைவு தினத்தை முன்னிட்டு பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய்க்கு குறைந்த விலைக்கு வழங்குகிறோம் என்று பேனர் வைத்துள்ளார்.

இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் 1 ரூபாய்க்கு பெட்ரோலா என நினைத்து விரைவாக அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்று பெட்ரோல் போட்டு 1 ரூபாயை கொடுத்துள்ளனர். அப்போது பெட்ரோல் ஊழியர்கள் சந்தை விலையை விட 1 ரூபாய் குறைத்து விற்பதாகதான் பேனர் வைத்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த வாகனஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பங்க் ஊழியர்கள் அந்த பேனரை படித்து பார்த்தபோது ஒரு ரூபாய் குறைத்து பெட்ரோல் போடப்படும் என்பதற்கு பதிலாக ஒரு ரூபாய்க்கு பெட்ரோல் போடப்படும் என தவறாக அச்சிடப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் நடந்த தவறை வாகன ஓட்டிகளிடம் விளக்கியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி வாகன ஓட்டிகளும் 1 ரூபாய் குறைத்து பெட்ரோல் போட்டு சென்றுள்ளனர். இந்த தகவல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த பலரும் இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.

Also Read: 3,700 கிலோ வெடிமருந்துகள்.. குவிந்த 30,000 டன் குப்பைகள்.. நொய்டா இரட்டை கட்டட இடிப்பின் விவரம் என்ன ?