Tamilnadu

ஜெயலலிதா மரணம்.. 608 பக்க விசாரணை அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்த ஆறுமுகசாமி ஆணையம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட நிலையில், 14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு, 158 பேரிடம் ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்திருக்கிறது. ஆணையம் சார்பாக 151 பேரிடமும், தங்களை விசாரிக்க வேண்டும் என்று மனு செய்த 7 பேரிடம் ஆணையம் விசாரணையை நடத்தியது.

இதில் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.

இந்த சூழலில் தான் 90 சதவீத பணிகள் ஆணையத்தின் விசாரணை நிறைவடைந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மருத்துவர்களின் வாக்குமூலத்தை தவறாக மொழியாக்கம் செய்து பதிவு செய்வதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

ஆனால் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு சென்ற அப்பல்லோ மருத்துவமனை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை வாங்கியது. இதன் காரணமாக சுமார் 2 வருடங்கள் எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளாமல் ஆணையம் முடங்கியது.

பின்னர் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு அமைத்து ஆணையம் தனது விசாரணை மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் உள்ளடக்கிய எயம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.

பின்னர் இறுதியாக ஆணையம் அமைக்க காரணமான ஓ.பன்னீர்செல்வம் ஆணைத்தில் தனது வாக்கு மூலங்களை கொடுத்தார். பல மருத்துவர்களிடமும் குறுக்கு விசாரணையும் செய்யப்பட்டது.

இதன் பின்பு நீதிபதி ஆறுமுகசாமி இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் பணிகளை தீவிரப்படுத்தினார். ஆனால் எயம்ஸ் மருத்துவ அறிக்கை கிடைப்பெறவில்லை. இதை தொடர்ந்து ஆகஸ்ட் 4 தேதி 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு தனது 3 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுத்துள்ளது. அதில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளது.

இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்துள்ள சுமார் 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார்.

Also Read: திருக்குறளை கையில் எடுத்து மாற்று மதத்தினர் மீது வெறுப்பு பேச்சு.. ஆளுநரின் நோக்கம் என்ன?: முரசொலி கேள்வி