Tamilnadu

"ஏழையின் சிரிப்பில் இறைவன்.." - அண்ணா பொன்மொழியை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள கீழகலுங்கடி பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள். 90 வயதுடைய மூதாட்டியான இவர், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய பை வழங்கியது. அப்போது கொடுக்கப்பட்ட கொரானா நிவாரண நிதியை பெற்றதன் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானார்.

அரசு வழங்கிய நிவாரண தொகையை பெற்றுக்கொண்ட இந்த பாட்டியின் முகத்தில் பளீர் என்று ஒரு வெகுளித்தனமான ஒரு சிரிப்பு இருந்தது. இதனை போட்டோகிராபர் ஜாக்சன் என்பவர் புகைப்படம் எடுத்ததால் வைரலானது.

மேலும் இந்த வைரல் புகைப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "ஏழையின் சிரிப்பு நமது அரசின் சிறப்பு" என்றும் பதிவிட்டிருந்தார். இது நடந்த சில மாதங்களில் வேறு ஒரு பணிக்காக கன்னியாகுமரிக்கு சென்ற முதலமைச்சர், மூதாட்டி வேலம்மாளை நேரில் சந்தித்தார். அப்போது அவரிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் அவரை தனது தாயாக நினைத்து உபசரிப்பும் செய்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலம்மாள் பாட்டி, முதலமைச்சருக்கு வீடியோ மூலம் கோரிக்கை ஒன்று விடுத்திருந்தார். அதில் தனக்கு தங்க ஒரு சிமெண்ட் வீடு இல்லை என்றும், எனவே தனக்கு ஒரு சொந்த வீடு அரசு சார்பில் வழங்க வேண்டும் என்றும் பேசியிருந்தார். இந்த வீடியோ வெளியானதையடுத்து முதலமைச்சர் உத்தரவின்பேரில், அரசு அதிகாரிகள் அவரை நேரில் சந்தித்து பேசினர். மேலும் விரைவில் அவருக்கு ஒரு வீடு வழங்கப்பட்டு என்று உத்தரவாதமும் அளித்தனர்.

இந்த நிலையில், தற்போது வேலம்மாள் பாட்டிக்கு தமிழ்நாடு அரசு சார்பாக வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதோடு அதற்கான உரிய ஆவணமும் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுவாக குடிசை மாற்றுவாரியத்துக்கு பயனர்கள் குறிப்பிட்ட ஒரு தொகை கொடுக்க வேண்டும். ஆனால் பாட்டியால் அந்த தொகையை கொடுக்க முடியவில்லை என்பதால் அதனை தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் பூதலிங்கம், மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் வழங்கியுள்ளார்.

"ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்" என்று பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கு ஏற்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சி நடைபெற்று வருகிறது.

Also Read: “குடிக்கிற டம்ளர் வைக்குற இடமா அது..?” - மது போதையில் நண்பனுக்கு சக நண்பர்கள் செய்த அதிர்ச்சி காரியம் !