Tamilnadu

"பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி.." -புகார் அளித்ததால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை :உபி-யில் பயங்கரம்!

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் சந்தனா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை சிலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நடந்து வந்தது.

பின்னர் கடந்த 18-ம் தேதி நீதிமன்ற விசாரணைக்காக அந்த சிறுமி தனியாக தனது வீட்டில் இருந்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். சென்றவர் இரவானதும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் சிறுமியை தேடியுள்ளனர்.

ஆனால் சிறுமி கிடைக்காததால் இது குறித்து போலிஸில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலிஸாரும் சிறுமியை தேடி வந்த நிலையில் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்துள்ளது.

இந்த நிலையில், சீதாபூர் மாவட்ட எல்லையில் இருக்கும் காசிபூர் பிஹ்டா என்ற கிராமத்தில் உள்ள கால்வாயில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலிஸார் அந்த சடலம் காணாமல் போன சிறுமியின் சடலம் என்பதை கண்டுபிடித்தனர்.

இது குறித்து சிறுமியின் குடும்பத்தினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள்தான் சிறுமியை கொலை செய்துள்ளதாக அவரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து சிறுமி காணாமல்போன வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: "என்னையா காத்திருக்க சொல்லுற.." மருத்துவரை தாக்கிய முதலமைச்சர் மகள்.. மிசோரமில் பரபரப்பு ! | VIDEO..