Tamilnadu

"இலவசத்தால் சமூக நலன் பெறுவது உனக்கு எறியுதுன்னா.. அப்படித்தான் கொடுப்போம்”-இணையத்தில் வைரலாகும் பதிவு!

உத்தர பிரதேச மாநிலம், புந்தேல் கண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இலவத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார்.மேலும், "இலவசத் திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என சிலர் கருதுகின்றனர். இந்த மோசமான கலாச்சாரத்தை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். இந்திய அரசியல் இருந்து இலவசத் திட்டக் கலாச்சாரம் வேரறுக்க வேண்டும்" எனவும் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இலவச திட்டங்கள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் எழுந்தன. மோடியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், "பொதுமக்களுக்கான சமூக நலத்திட்டங்களை இலவசம் என்று ஒரு குறுகிய அடைப்புக்குள் அடக்கிடாமல், கிராமப்புற ஏழை எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதாரப் புரட்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். இந்நிலையில், இலவச திட்டங்களை அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக வழங்கலாமா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சமீபத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கில ஊடகம் ஒன்றில் கலந்துகொண்டு இலவசம் குறித்து பேசியது இந்திய அளவில் கவனிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் இளா என்பவர் இலவசம் குறித்து பதிவிட்டுள்ளது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

அவர் பதிவில், மக்களுக்கான உரிமைகளை, தேவைகளைப் பெறுவதையும், அரசு அதை வழங்குவதையும் இலவசம்/பிச்சை எனக் கூறுவதைப் போல பச்சை அயோக்கியத்தனம் வேறு எதுவும் கிடையாது. மக்களுக்கு அரசு வழங்கும் ஒவ்வொரு பொருளும் திட்டமும் சமூகநலத்தையும் சமூகநீதியையும் அடிப்படையாகக் கொண்டது மட்டும் தான்.

உதாரணத்திற்கு, சீமான் அண்ணாமலை போன்றவர்கள் மொழியில் சொல்வது போல "தேவையில்லாத பொருட்கள்' என விமர்சிக்கும் கேஸ் ஸ்டவ், தொலைக்காட்சி போன்றவற்றை எடுத்துக்கொள்வோம்.

கேஸ் ஸ்டவ் கொடுப்பதற்கான திட்டத்தில், 'ஒரு பர்னரோடு கொடுத்தால் போதும், அது தான் நிதிநிலையையும் பெரிதாக பாதிக்காது' என திமுக குழு பரிந்துரைத்தபோது, "வேணாம்யா ரெண்டு பர்னர் உள்ள பெருசே கொடுப்போம், சீக்கிரம் வேலை முடிஞ்சு வெளிய வந்து பெண்கள் படிக்கவோ,வேலைக்கோ போகட்டும்" என சொன்னவர் கலைஞர். கேஸ் ஸ்டவ் கொடுத்ததனால் பெண்களுக்கான "நுரையீரல்" பாதிப்பு பிரச்சனை கணிசமான அளவு குறைந்திருப்பதாக டேட்டா உள்ளது.

இதே தான் கலைஞர் வழங்கிய தொலைக்காட்சி திட்டத்திலும். "உலகத்துடனானத் தொடர்பை மக்கள் பெறுவதற்கும், அடிதட்டு மக்களும் உலக செய்திகளை, முன்னேற்றங்களைத் தெரிந்துகொள்ளவும் வேண்டும்" என்ற நோக்கத்தோடு இத்திட்டத்தை அறிவித்தார் கலைஞர். தெருவில் உள்ள 'பெரிய வீட்டில்' மட்டுமே ஒண்டி இருந்து டிவி பார்த்தவர்கள் தங்கள் வீட்டிலேயே 'நிம்மதியாக' 'தாழ்வு மனப்பான்மை இல்லாமல்' பார்க்க முடிந்தது. "வேறு எங்கும் இல்லாத முன்னோடித் திட்டமாக எதை சொல்வீர்கள்.? "என பழங்குடியின செயற்பாட்டாளர் வழக்கறிஞர் திரு.ராஜன் அவர்களிடம் கேட்கப்பட்டபோது,

" கருணாநிதி கொண்டுவந்த இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம். “டிவி இருக்கு; மின்சாரம் இல்லை;கேபிள் இல்லை' என்றபோது அரசாங்கம் மிச்ச சொச்சம் மின்சாரம் இல்லாத இடங்களுக்கும் மின்சாரத்தைக் கொண்டுவந்தது. கேபிள் மூலமாக தகவல் தொடர்பு வந்தது. எல்லாவற்றுக்கும் மேல் எங்கள் மக்களில் பெரும்பாலானோர் அப்போதுதான், 'உலகம் எப்படி இருக்கிறது, நாம் எப்படி இருக்கிறோம்' என்று பார்த்தார்கள்.உலகத்தை எங்களோடு இணைத்த திட்டம் அது!" என்று கூறுகிறார்.இது தான் உண்மை நிலை. இது தான் மக்கள் மனநிலை.

இந்த இரண்டு மட்டுமல்ல விவசாயி/நெசவாளர் 'இலவச மின்சாரம்' , 'இலவச அரிசி' , ' இலவச வீடு' , 'இலவச கல்வி, பஸ் பாஸ், சீருடை, நேப்கின், சைக்கிள் , லாப்டாப், சத்துணவு', 'இலவச பேருந்து பயணம்' என எண்ணற்ற 'இலவச' திட்டங்கள் அனைத்துமே மக்கள் பணத்தில் மக்களால் ஆன அரசு மக்களுக்கான சமூகநலனுக்காக, சமூக நீதிக்காக செய்யும் நலத்திட்டஙகள். அடிப்படை அத்தியாவசங்களை தேவைகளை அரசு பார்த்துக்கொண்டால் அதிலே செலவிடும் நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் மக்கள் கல்வியிலும், வேலையிலும், நாட்டின் முன்னேற்றத்தில் செலவிடுவார்கள். அப்படித்தான் தமிழ்நாடு செய்து காட்டி நிரூபித்திருக்கிறது.

அப்படித்தான் 'தனிநபர் வருமானம்' , 'உயர்கல்வியில் சேர்வோர் விகிதம்', 'மனிதவள மேம்பாடு', 'சுகாதாரக் கட்டமைப்பு' போன்றவற்றில் தமிழ்நாடு முன்னனியில் உள்ளது. வீட்டில் சோனி,சாம்சங் டிவி வைத்துக்கொண்டும் சென்று அரசு தொலைக்காட்சியை வாங்கும் அல்பைங்க தான் அதை "Freebies", "இலவசம் கொடுத்து நாட்ட கெடுக்குறாங்க" எனும் நீலிக்கண்ணீர் வடிப்பார்கள் . உண்மையாக அது பல லட்சம் பேருக்கு அத்தியாவசியமாக இருந்திருக்கிறது. இது ஒரு சமூகநீதி திட்டம்.

மக்கள் உரிமையான 'இடஒதுக்கீட்டை' பிச்சை என கதறிக்கொண்டே 'உயர் சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு " வாங்கிவிட்டு வாயை மூடிக்கொண்ட அண்ணாமலையின் பாஜக சங்கிகளும் ஃப்ராடுகளும் , தமிழ்நாட்டில் அனைத்து சமூகநலத்திட்டங்களையும் பார்த்து, நலன் பெற்று மக்களின் தேவையை, உரிமையை "பிச்சை" என சொல்லும் சீமானின் முட்டாள் கூட்டமும் இந்த விசயத்தில் ஒரே கோட்டில் நிற்பது ஆச்சர்யமில்லை.

தயவு செய்து இவர்கள் இதே கருத்தை மக்கள் முன்னாடியும் வைக்க வேண்டும். உண்மையான மக்கள் விரோத முகத்தை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இவர்கள் செயலைப் பார்த்தால், பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் சார் , "மக்கள் நல, சமூகநலத்திட்டங்களை, உரிமைகளை 'இலவசம்'னு எவனாவது பேசுனா செருப்பால் அடியுங்கள்". என சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. இலவசம்னால சமூக நலன் அடையிறது உனக்கு எறியுதுன்னா.. அப்படித்தான் கொடுப்போம்.. சமூக நீதி காக்கப்படுறது எறியுதுனா அந்த இலவசத்த கொடுத்துட்டே தான் இருப்போம்.

Also Read: எத்தனை சூடு போட்டாலும் திருந்தாத ஜென்மங்களை, எந்த வகையில் சேர்ப்பதோ ? -அண்ணாமலைக்கு சிலந்தி பதிலடி!