Tamilnadu

'சோலா பூரியில் செத்து கிடந்த புழுக்கள்'-பிரபல ஹோட்டலில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்!

சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் மாலான VR மால் செயல்பட்டு வருகிறது. இதில் மூன்றாவது தளத்தில் உணவு கூடங்கள் அமைந்துள்ளது. அதில் 'நம்ம வீடு வசந்த பவன்' பெண் வாடிக்கையாளர் ஒருவர் தனது குடும்பத்துடன் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர்கள் 'சோலா பூரி' ஆர்டர் செய்துள்ளனர். அந்த பூரியும் வந்தவுடன் ஆசையாக உணவை எடுத்து சாப்பிட தொடங்கியபோது அதில் புழு இருந்தது தெரியவந்தது.

பின்னர் அந்த பெண் உணவு கூடத்தின் உள்ளே சென்று பார்த்தபோது, பூரிக்கு பயன்படுத்திய மாவில் புழுக்கள் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் உடனடியாக உணவு பாதுகாப்பு துறையை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த சென்னை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

அப்போது சமையல் கூடத்தில் இருந்த மாவு மூட்டைகள் புழு இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த உணவகத்தை தற்காலிகமாக தடை விதித்ததோடு கடைக்கு அபராதமும் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் உணவக உரிமை வைத்திருக்கும் உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, மறு உத்தரவு வரும் வரை உணவகத்தை நடத்தக்கூடாது என்று எச்சரிகையும் விடுத்தனர்.

மேலும் இந்த ஒருக்கடை மேல் தொடர்ந்த புகாரின் அடிப்படையில் மற்ற கடைகளிலும் சோதனை செய்தபோது, இதுபோன்று 4 கடைகளில் உணவு பராமரிப்பு சரியில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அனைத்து கடைகளுக்கும் அபராதம் விதித்தோடு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக அசைவ உணவான பிரியாணி, ஷவர்மா உள்ளிட்ட உணவில் புழுக்கள் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது சைவ உணவிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "பலூன் மூலம் கொரோனவை பரப்புகிறார்கள்.." - தென்கொரியா மீது வடகொரியா அதிபரின் தங்கை குற்றச்சாட்டு !