Tamilnadu

"நெஞ்சு வலிக்கிறது, சிறைக்கு செல்ல மாட்டேன்"..தேம்பி தேம்பி அழுத பாஜக மாநில துணைத்தலைவர்..நடந்தது என்ன ?

கடந்தவாரம் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில், பா.ஜ.க சார்பில் அமுதப்பெருவிழா பாத யாத்திரை நடைபெற்றது. பா.ஜ.க மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் துவக்கி வைத்த இந்த பேரணியில், பா.ஜ.க ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். இந்த பேரணியானது, பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து துவக்கப்பட்டு தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் வரை நடைபெற்றது.

அப்போது சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் உள்ள பாரதமாதா கோயிலில் மாலை அணிவிக்க பா.ஜ.வி-னர் முயன்றனர். ஆனால் அந்த கோயிலோ பூட்டு போட்டு போடப்பட்டிருந்தது. இதையடுத்து பா.ஜ.க-வினர் கதவை திறக்கும்படி அங்கிருக்கும் பணியாளரிடம் கேட்டுள்ளார்.

ஆனால், பணியாளரோ, அதிகாரி அனுமதியின்றி திறக்கமுடியாது என்று மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் அருகில் இருந்த கல்லை எடுத்து அந்த பூட்டை உடைத்துள்ளார். பின்னர் பா.ஜ.க-வினர் உள்ளே சென்றார்.

இதைத் தொடர்ந்து அத்துமீறி பாரத மாதாவின் கோயில் பூட்டை உடைத்ததாக கே.பி.ராமலிங்கம் மீது புகார் எழுந்ததையடுத்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் ராசிபுரம் காவல்துறையினர் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.

பின்னர் உடல்நல குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்ரேட் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்தநிலையில், அவரை சிறையில் அடைக்க போலிஸார் வந்தனர்.

அப்போது, மீண்டும் நெஞ்சு வலிப்பதாக கூறிய அவர், படுக்கையில் இருந்து இறங்க மறுத்துள்ளார். இதனால் படுக்கையுடன் அவரை வெளியே கொண்டுவந்த போலிஸார் வாகனத்தில் ஏறக்கூறியுள்ளனர். அப்போது வாகனத்தில் ஏறமாட்டேன் எனக் கூறி தேம்பி அழுதுள்ளார். மேலும் என் காய் உடைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.

எனினும் அவரை வலுக்கட்டாயமாக போலிஸ் வாகனத்தில் ஏற்றி, சேலம் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சென்றும் நெஞ்சு வலி என்று இறங்க மறுத்து அழுதவரை போலிஸார் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.