Tamilnadu

'தமிழ் கடல்' நெல்லை கண்ணன் உயிரிழப்பு.. பிரபலங்கள் இரங்கல் !

தமிழறிஞரும், பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணனுக்கு வயது 77. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர், காமராஜர், பாடலாசிரியர் கண்ணதாசன் உள்ளிட்ட பெரிய ஆளுமைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்தவர்.

1992 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலின்போது வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் மற்றும் இவரது பெயரும் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்போது இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன்பிறகு 2001-ம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார். ஜெயலலிதா இவருக்கு ஒரு கார் பரிசளித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரால் அ.தி.மு.கவில் நீண்டநாட்கள் நீடிக்க முடியவில்லை. ஓர் ஆண்டு இடைவெளியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார். அரசியலில் மிகப் பெரிய பதவிக்கு அவரால் வர முடியவில்லை.

இதைத் தொடர்ந்து இலக்கிய சமய சொற்பொழிவாற்றி வந்த இவர், தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். 75 வயதை நெருங்கும் நிலையிலும் பேச்சாற்றலும் நினைவாற்றலும் இவரது பேச்சு இலக்கிய நயமும் சிறப்பாக இருந்து வந்தது.

இப்படி அருமை மிக்க பேச்சாற்றலை கொண்ட இவர், கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணாமாக உடல்நலக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது திருநெல்வேலியிலுள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். இவரது மறைவு அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.