Tamilnadu

அரிய நோயால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் சிறுமி.. உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினர். இவர்களுக்குக் கடந்த 2012ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள்,மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர்களின் மூத்த மகள் டானியா (9). இவர் டானியா வீராபுரம் அரசினர் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். எல்லா குழந்தைகள் போல் டானியாவும் மூன்று வயது வரை இயல்பாக வளர்ந்துள்ளார். பின்னர் அவருக்கு முகத்தில் கரும்புள்ளி போன்று தோன்றியுள்ளது. இதனை முதலில் சாதாரண ரத்தக்கட்டு என பெற்றோர்கள் நினைத்துள்ளனர்.

ஆனால் இது சரியாகவில்லை. பின்னர்தான் இது முக சிதைவு நோய் என்று பெற்றோர்களுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த ஆறு ஆண்டுகளாகப் பல மருத்துவர்களைப் பார்த்து வந்துள்ளனர். இருப்பினும் சிறுமிக்கு சரியாகவில்லை. மேலும் பல லட்சங்களை சிகிச்சைக்காக பெற்றோர்கள் செலவழித்துள்ளனர். இதையடுத்து தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இது பற்றி அறிந்த திருவள்ளூர் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் உடனே அவரது சிறுமியின் வீட்டிற்கு மருத்துவக்குழு ஒன்றை அனுப்பி பரிசோதனை செய்துள்ளனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கிஸும் சிறுமியை நேரில் சந்தித்து 'உனக்கு அரசு உதவியாக இருக்கும்' என உறுதியளித்துள்ளார்.

மேலும் "சிறுமிக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுமிக்குச் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் சிகிச்சை தொடங்கப்படும்" என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Also Read: ரூ.17 லட்சம் மதிப்புள்ள Cadbury Chocolate திருட்டு: சிசிடிவி கேமராவையும் கையோடு எடுத்து சென்ற கும்பல்!