Tamilnadu

’பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்’.. மாணவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா: அமைச்சர் அசத்தல் அறிவிப்பு!

திருச்சி சையது முர்துஷா அரசு மேல்நிலைப் பள்ளியில் ’பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்’ என்ற திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கான நூலக செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி," ’பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்’ திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் 6-8, 9-10, 11-12 என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டும். மாணவர்கள் தினந்தோறும் 20 நிமிடங்களாவது நூலகத்தில் செலவிட வேண்டும்.

மாணவர்கள் தாங்கள் வாசிக்கும் புத்தகம் குறித்த கருத்துக்களைப் பகிரலாம், ஓவியங்கள் வரையலாம். கதை, கட்டுரை எழுதலாம். இதன் மூலமாக மாணவர்களுக்கு மனமாற்றம் ஏற்படும். மாணவர்கள் வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் 'பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்' மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் 'அறிவுப் பயணம்' என்கிற பெயரில் வெளிநாட்டுச் சுற்றுலாவுக்குச் செல்ல வாய்ப்பளிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: திராவிட இயக்க சித்தாந்தத்தின் இந்திய முகம் ’முரசொலி மாறன்’ : மூத்த பத்திரிகையாளர் பகிரும் நினைவலைகள் !