Tamilnadu

“வணக்கம் நான் CM பேசுறேன்.. உங்க Complaint என்ன?” : மின்னகத்தில் மக்களின் குறைகளை கேட்ட முதல்வர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.8.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலையங்களையும், மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்த நிகழ்ச்சியின்போது, மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்தின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது அமைச்சர், சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டு வருவதாக தெரிவித்தார். முதலமைச்சர் நேரடியாக மின்னகத்திற்கு வந்து ஆய்வு செய்வதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான "மின்னகம்" சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, முதலமைச்சர் மின்னகத்தில் புகார் அளித்தவர்களில் 10 இலட்சமாவது நுகர்வோரான திரு.சுவாமிநாதன் அவர்களுடன் மின்னகத்தில் இருந்து அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர்சேவை பற்றி கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களின் அழைப்புகளை ஏற்று, குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

"மின்னகம்" மின்நுகர்வோர் சேவை மையம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 20.06.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. தொடங்கிய நாள் முதல் இன்று வரை தமிழ்நாடெங்கும் உள்ள மின்நுகர்வோர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மின்னகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மின்னகத்தின் தலைமையகமான சென்னையில் முறைப்பணி ஒன்றிற்கு 65 நபர் வீதம் மூன்று முறைப்பணிகளாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் இயங்கி வரும் 44 மின் பகிர்மான வட்டங்களிலும் நாள் ஒன்றிற்கு நான்கு பேர் வீதம் 176 நபர்களை கொண்டும் இயங்கி வருகிறது. தமிழகம் முழுவதுக்குமான மின்னகத்தின் அலைபேசி எண்ணான 94987 94987-ல் பொதுமக்கள் 24x7 மணி நேரமும் புகார்களை அளிக்கலாம்.

இந்த மின் நுகர்வோர் சேவை மையத்தில் பொதுமக்கள் யாவரும் மின்சாரம் சம்பந்தமான மற்றும் துறை சம்பந்தப்பட்ட பெயர் மாற்றம், மின்விநியோகத்தில் தடை, விகிதப்பட்டியல் மாற்றம், மின் கட்டணத்தில் உள்ள சந்தேகங்கள் உள்ளிட்ட அனைத்துவித புகார்களை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று மின்னகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, “இம்மின்னகத்தில் நேற்றைய தேதி வரை 10,50,282 புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அவற்றுள் 10,41,872 புகார்களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. மொத்தத்தில் 99% புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.

தமிழ்நாட்டு மக்களின் மின்துறை சார்ந்த குறைகளை தீர்ப்பதில் முழுமூச்சுடன் செயல்பட்டு, அன்றைய தினமே தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்னகத்திற்கு வரும் பொதுமக்களின் அழைப்புகளுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒப்புகை அளிப்பதோடு, குறைகள் தீர்வு காணப்பட்டவுடன் அதுகுறித்தும் பொதுமக்களிடம் அலைபேசி வாயிலாக உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தொகுதி வாரியாக செயற்பொறியாளர் ஒருவரும், அமைச்சர்களின் தொகுதிகளில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மேற்பார்வை பொறியாளர்களும் நியமிக்கப்பட்டு, அமைச்சர் பெருமக்கள் / சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு பொதுமக்களின் தேவை மற்றும் குறைகளை கேட்டறிந்து உடனடியாக சரி செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்று மின்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Also Read: விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்.. வீரத் தமிழர்களின் பங்களிப்பை பறைசாற்றிய முதலமைச்சர்!