Tamilnadu
’பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் கைவிடப்படுமா?’- வதந்தி பரப்புவோருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்தள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தவும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி நெசவாளர் கூட்டமைப்புகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் நடத்துவதாகவும் மற்றும் இத்திட்டத்தினை அரசு கைவிட உத்தேசித்துள்ளதாகவும் சில பத்திரிகை மற்றும் ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
வேட்டி சேலை வழங்கும் திட்டம், தமிழக அரசினால் 1983-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சீரிய திட்டங்களில் ஒன்றாகும். பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.
இத்திட்டத்திற்கு தேவையான மொத்த சேலைகள் மற்றும் வேட்டிகள் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட ஏதுவாக வருவாய்த் துறைக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 2,664 கைத்தறி நெசவாளர்கள், 11,124 பெடல்தறி நெசவாளர்கள் மற்றும் 41,983 விசைத்தறி நெசவாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்வதுடன், தமிழகத்திலுள்ள கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் 3.59 கோடி மக்களுக்கு பயனளிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்திற்கான உற்பத்தி நிறைவடைந்தவுடன், வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடங்குவதற்கான கொள்கை அளவிலான அரசாணைகள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்பட்டு, வேட்டி சேலை உற்பத்திக்கு தேவையான நூல் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன.
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து உற்பத்தியினை மேற்கொள்ளும் வகையில், ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2022 வரை, கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்கள் தொடர் வேலை வாய்ப்பு பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் பொங்கல் 2023-ற்கு வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்திடவும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தொடர்ந்து உற்பத்தியை மேற்கொள்ளவும் அரசின் கொள்கை அளவிலான ஆணைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. இத்திட்டத்திற்காக 2022–2023 நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் ரூ.487.92 கோடி நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!