Tamilnadu

பஞ்சு குடோனில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு.. பெற்றோர் வேலை செய்த இடத்திலேயே நடந்த சோகம் !

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முத்தாநதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 38). இவரது மனைவி காளீஸ்வரி (வயது 31). இவர்களுக்கு தமிழ்ச்செல்வி (வயது 7) என்ற மகளும், சுந்தர் (வயது 4) என்ற மகனும் உள்ளனர்.

இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திண்டுக்கல் அருகே ரெட்டியப்பட்டியில் உள்ள தனியார் பஞ்சு மில்லில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தனர். இவர்களது மகன், மற்றும் மகள் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருப்பது வழக்கம்.

இந்த நிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் , குடோனில் சேமித்து வைத்திருந்த பஞ்சில் இவர்களது மகன் சுந்தர் விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளான்.

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சுந்தரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் சுந்தர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மேலும் இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "நமது அரசாங்கம் என்று கூறவே அசிங்கமாக உள்ளது".. உ.பி அரசை விமர்சித்த பா.ஜ.க எம்.பி ! பின்னணி என்ன ?