Tamilnadu

துபாயிலிருந்து இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை.. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது !

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் வசித்து வந்தவர் 16 வயது சிறுமி. இவர் இன்ஸ்டாகிராம் மூலம் துபாயில் வேலை பார்த்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீதரன் என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி ஆடியோ, வீடியோ கால் பேசிக்கொள்வது வழக்கம்.

இந்த நிலையில், துபாயில் உணவகத்தில் வேலை செய்து வந்த ஸ்ரீதரன், விடுமுறை கேட்டு இந்தியாவுக்கு வந்துள்ளார். அப்படி வந்த அவர் சிறுமியை சந்திக்க விரும்பியுள்ளார். சிறுமியும் அவரை காண சென்றபோது இருவரும் தஞ்சாவூருக்கு சென்றுள்ளனர். அங்கே இளைஞர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.

இதனிடையே சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க, அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது சிறுமியின் சமூக வலைதளங்களை சோதனை செய்த போது, அவர் ஸ்ரீதரனுடன் பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீதரன் குறித்த விவரங்களை சேகரித்த காவல் அதிகாரிகள் அவரையும் சிறுமியையும் தேடி தஞ்சாவூர் வரை சென்றனர்.

அங்கே ஸ்ரீதரனை கைது செய்த அதிகாரிகள் விசாரித்தபோது , சிறுமியும் அவரும் திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. மேலும் இருவரும் நெருங்கிய உறவில் இருந்ததும் தெரிய வந்தது. பின்னர் வழக்கின் விசாரணை போரூரில் உள்ள அனைத்து பெண்கள் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து ஸ்ரீதரனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: சரக்கு ரயில் இன்ஜினில் சிக்கிய இளைஞர்.. 5 கி.மீ தரதரவென இழுத்து சென்ற அவலம் ! - அடுத்து நடந்தது என்ன ?