Tamilnadu

"கலைஞரின் வாழ்வு இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க ஊக்குவிக்கும்" -தமிழில் புகழஞ்சலி செலுத்திய கேரள முதல்வர்!

முத்தமிழறிஞர் கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த அமைதிப் பேரணியில், நாடாளுன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான கழக தொண்டர்கள் பங்கேற்றனர்.

கலைஞரின் நினைவு நாளில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், "சமத்துவபுரம் கண்டு சனாதனம் வென்ற சாதனையாளர். தனது இறுதி மூச்சுவரை சனாதனப் பகையை எதிர்த்துப் போராடிய சனநாயகப் புரட்சியாளர். விடுதலைச் சிறுத்தைகளை கொள்கை சார்ந்த நட்புறவுடன் அரவணைத்தவர். அவருக்கு வீர வணக்கம் !" என்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதோடு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், "கலைஞர் தமிழ்நாட்டின் தலைவர் மட்டுமல்ல, நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளுள் ஒருவர். அவரது வாழ்வும், செயல்பாடும் நாடு முழுவதிலும் இருக்கும் எண்ணற்றோரை உத்வேகம் கொள்ள வைக்கிறது." என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, "புதுச்சேரி மாநில அரசு சார்பில் புதுச்சேரியில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு விரைவில் சிலை நிறுவப்படும்" என்று உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், "திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது. அவரது நினைவு நாளில் எனது புகழஞ்சலியை திரு மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரின் வாழ்வும், நினைவும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும்." என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.