Tamilnadu

கிரிக்கெட் மட்டையால் கணவர் கொலை.. மகனை மாட்டி விட்ட கொடூர தாய்.. வெளியான அதிர்ச்சி காரணம் !

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஒரு பகுதியில் வசித்து வந்தவர் ஓமந்தூரார். கேரளாவில் பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவருக்கு திருமணமாகி பாண்டீஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான ஓமந்தூரார், குடித்துவிட்டு அடிக்கடி மனைவி மற்றும் குழந்தைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஓமந்தூரார் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக அவரது மகன் காவல்துறையில் தான் தான் தனது தந்தையை கொலை செய்ததாக சரணடைந்தார். இதையடுத்து அவர் சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இருப்பினும், தனது மகன் மரணத்தில் தனது மருமகளுக்கு தொடர்பு இருப்பதாக தந்தை அளித்த புகாரின்பேரில், காவல்துறை விசாரணையில் இறங்கியது. அப்போது விசாரணையில், ஓமந்தூரார் குடித்துவிட்டு தனது மனைவி குழந்தைகளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததும், தனது மனைவி பெயரில் இருக்கும் வீட்டை தனது பெயருக்கு மாற்றிக்கொடுமாறும் தொல்லை கொடுத்து வந்ததும் தெரிய வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி பாண்டீஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் கிருஷ்ணவேணி, லட்சுமி, ராமையா ஆகிய 4 பேர் சேர்ந்து ஓமந்தூராரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ஓமந்தூராரை கொலை செய்த பின்னர், தனது 15 வயது மகனிடம் கொலை பழியை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சியுள்ளனர். மகனுக்கு 15 வயது என்பதால் தண்டனை குறைவு என்று கூறி சிறுவனை மூளைச்சலவை செய்துள்ளனர். சிறுவனும் தனது குடும்பத்திற்காக கொலை பழியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து கொலை மற்றும் கொலை குற்றத்தை மறைத்த வழக்கில் பாண்டீஸ்வரி உள்ளிட்ட 4 போரையும் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இறந்த பன்றியை உயிரோடு எழுப்பிய விஞ்ஞானிகள்.. இனி இறப்பே கிடையாதா? அமெரிக்காவில் நடந்த அறிவியல் புரட்சி !