Tamilnadu

குழந்தைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்த தாய்.. 3 குழந்தைகள் பரிதாப பலி ! - நடந்தது என்ன ?

திருவண்ணாமலை மாவட்டம் சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். 30 வயதாகும் இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவியும், 3 ( 2 மகன்கள், 1 மகள்) குழந்தைகளும் உள்ளனர். இதில் ஒரு குழந்தை அங்குள்ள அரசுப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். மற்ற இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை பிறந்து 7 மாதங்கள் தான் ஆகிறது.

3 குழந்தைகள் இருப்பினும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு நடக்கும். சிறு விஷயத்துக்கு கூட இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்படும்.

இந்த நிலையில், அமுதா நேற்று மதியம் தனது 7 மாத கைக்குழந்தை உட்பட 3 குழந்தைகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்த தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த தென்பெண்ணை ஆற்றங்கரை சென்றுள்ளார். அங்கே அந்த மூன்று குழந்தைகளையும் தன்னுடன் இணைத்து ஒரு துணியால் இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றுக்குள் குதித்தார். இதில் அவர்கள் அனைவரும் மூழ்கினர்.

இதனைக்கண்ட பொதுமக்கள், உடனே ஆற்றில் இறங்கி அவர்கள் மூவரையும் மீட்டனர். பிறகு மருத்துவமனைக்கு அனைவரையும் கொண்டு சென்றனர். அப்போது அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த அமுதா, தற்போது நலமாக உள்ளார்.

மேலும் அவருக்கு பூரண குணமடைந்ததும் அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ’நீங்களே வைச்சிக்கோங்க..’ : பாஜக MLA டார்ச்சர் காரணமாக சாமியார் எடுத்த விபரீத முடிவு !