Tamilnadu

"புறாவுக்கு போரா..!" - தந்தூரிக்குக் மயோனைஸ் கொடுக்காததால் அடிதடி.. - நெல்லையில் பரபரப்பு !

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் 'கசாலி' என்று உணவகம் ஒன்று உள்ளது. அசைவ உணவகமான இதில், பொதுமக்கள் பலரும் உணவு உண்ணுவது வழக்கம். பேருந்து நிலையம் அருகே இருப்பதால் இங்கு தினமும் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில், சம்பவத்தன்று மணிகண்டன், சிவபெருமாள் ஆகிய இரண்டு பெரும் அங்கே உணவருந்த வந்தனர். அப்போது அவர்கள் 1/4 அளவிற்கும் தந்தூரி சிக்கென் ஆர்டர் செய்தனர். ஆர்டரை எடுத்து வந்த ஊழியரிடம், தந்தூரிக்கு மயோனைஸ் கேட்டுள்ளனர். அப்போது ஊழியர், அரை தந்தூரி வாங்கினால் தான் மயோனைஸ் உண்டு என்றும், 1/4-க்கு மயோனைஸ் கொடுக்க முடியாது என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது.

அப்போது உணவருந்த வந்தவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே இரு தரப்பினருக்கிடையே கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து கடையில் இருந்த அனைத்து ஊழியர்களும் ஒன்று சேர்ந்து உணவருந்த வந்தவர்களை சரமாரியாக தாக்கினர். அதோடு கைகளில் கிடைத்த பொருட்களையெல்லாம் கொண்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அடிதடியில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: சாக்லேட் ருசி பார்க்க ரூ.61 லட்சம் சம்பளம்.. பம்பர் ஆஃபர் கொடுத்த சாக்லேட் நிறுவனம்..!