Tamilnadu

”மாற்றுத்திறனாளி என்ற சொல்லை எப்போது பயன்படுத்துவீர்கள்”: ஒன்றிய அரசுக்கு திமுக MP தயாநிதி மாறன் கேள்வி!

இந்திய அளவில் ஊன முற்றோர் என்கிற சொல் லுக்குப் பதிலாக மாற்றுத்தி என்ற சொல்லை எப்போது பயன்படுத்தப்போகிறீர்கள் என நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

"மாற்றுத்திறனாளிகளை ஊனமுற்றோர்' என முதலில் எல்லோரும் அழைத்து வந்தனர். ஊனமுற்றவர்கள் உடலளவில் ஊனமுற்றவர் களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் உள்ளம் ஊனமுற்று இருக்க கூடாது என்று சொல்லி மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை தந்து அவர்களுக்கென தனி உருவாக்கி அவர்களின் நலன் காத்தது முத்தமிழறிஞர் கலைஞர்அவர்களின் அரசு.

கால்கள் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால் வழங்கியது, மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை வழங்கியது போன்ற எண்ணற்ற சலுகைகளை வழங்கி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் காவலராக விளங்குகிறார். மேலும் தனது திரைக்கதை வசனம் மூலம் ஈட்டிய ரூ.45 லட்சத்தை மாற்றுத்திறனாளித்துறைக்கு வழங்கி பயன்பெறச் செய்தவர்.

File image

அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தேசிய கொள்கை மற்றும் அரசுத் துறையின் பல்வேறு வரைவுகளில் ஊனமுற்றோர் என்னும் வார்த்தையை மாற்றுத்திறனாளி என்று மாற்றம் செய்யும் திட்டம் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்திடம் உள்ளதா என்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தேசிய கொள்கை மற்றும் ஒன்றிய அரசுத் துறையின் பெயர்கள், புத்தகங்கள், சட்ட முன்வரைவு உள்ளிட்டவைகளில், ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றுத்திறனாளி என்று மாற்ற ஒன்றிய அரசு முன்மொழிகிறதா என்றும் அவ்வாறெனில் அத்தகைய உத்தரவு எப்போது பிறப்பிக்கப்படும்?

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தேசிய கொள்கை குறித்து கலந்தாய்வு முறைக்கான வரைவு, சைகை மொழி மற்றும் பிராந்திய மொழிகளில் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் பெருமளவில் அக்கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதை ஒன்றிய அரசு அறிந்துள்ளதா, அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.

முதலில் சைகை மொழி மற்றும் பிராந்திய மொழிகளில் வரைவுகள் வழங்கப்படாததற்கான காரணம் என்ன என்றும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிராந்திய மொழி பேச்சாளர்கள் பயன்பெறும் வகையில் அத்தகைய வரைவுகள் வழங்கப்படுமா, அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

ஒன்றிய அரசின் புதிய தேசிய கொள்கை வரைவு குறித்து இதுவரை பொது மக்கள் மற்றும் துறைசார்ந்த வல்லுநகர்கள் அளித்த கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் என்ன என்றும், அதுசார்ந்து ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்றும் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.

Also Read: “கையில் ஆவணமும் இல்லை, மண்டையில் மூளையும் இல்லை” : அண்ணாமலைக்கு ‘பளார்’ பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி!