Tamilnadu

ரயில் நிலைய உதவி மையங்களின் பெயர் இந்தியில் மாற்றம் -ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு பெருகும் கண்டனம் !

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் பிற மாநில அமைச்சர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலம் தெரிந்த அமைச்சர்கள் கூட இந்தியில் பதில் சொல்வதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கல்வியில் இந்தி, ரயில்வே துறையில் இந்தி என எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்ற கொள்கையை ஒன்றிய அரசு பின்பற்றுவது பிற மாநில மக்கள் இடையே மொழி ரீதியான அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், ரயில்வே துறையில் புதிதாக அறிமுகப்படுத்தும் ரயில்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் சூட்டும் ஒன்றிய அரசு தற்போது இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை இந்தி மொழியில் மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை “சஹ்யோக்” என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்தி வெறியர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை வன்மையாக கண்டிக்கிறேன்.@AshwiniVaishnaw தலையிட்டு உத்தரவை திரும்பப் பெற வேண்டுகிறேன்." எனக் கூறியுள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் பலரும் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

Also Read: மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த தம்பி.. சுதாரித்து கப்பென்று catch பண்ண அண்ணன் : Viral Video