Tamilnadu

உலக அளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அடுத்த திட்டங்கள் இதுதான்.. பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கம் இயக்கம் சார்பில், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு, கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை வருமாறு:-

தமிழ்நாடு தொழில்நுட்ப புத்தாக்க மையம்" (i-TNT Hub) சுமார் 54.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தில் அமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டு விட்டன. 25,000 சதுர அடியில் அமையவிருக்கும் இந்த மையமானது இந்திய தொழில் நுட்பக் கழக ஆராய்ச்சி பூங்காவைப் போன்று (IIT Research Park) உலகத்தரம் மிக்க நிறுவனங்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்த உயர் தொழில்நுட்ப துறைகளுக்கான காப்பகம் தமிழ் நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் மற்றும் வளர்ந்து வரும் எதிர்கால தொழில்நுட்பங்கள் சார்ந்து இயங்கும் அனைத்து புத்தொழில் முனைவோர்களுக்கும் பயன் தரும் வகையில் இயங்கும்.

தொழில் முனைவோர்கள் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்காக "ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பிராண்ட் லேப்ஸ்" (StartupTamilNadu Brand Labs) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளம் தொழில் முனைவோர்கள் சந்திக்கும் பல்வேறு சந்தைப்படுத்தல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வணிகம் பெருகும்.

புத்தொழில் நிறுவனங்களை அறிமுகப்படுத்தும்"லான்ச் பேட்" (Launch Pad) நிகழ்வுகளையும் நடத்த இருக்கிறோம். ஊரகப்பகுதிகளில் உள்ள பெண்களுக்கு தொழில் முனைவில் ஈடுபட உதவும் வகையில்"தொழிலணங்கு" என்ற பெயரில் நிகழ்வினை நடத்துகிறது டான்சிம்.

உலகெங்கும் உள்ள தமிழ் முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்து "தமிழ் ஏஞ்சல் நெட்வொர்க்" (Tamil Angels Network) தளம் விரைவில் அமையவிருக்கிறது. புத்தொழில் நிறுவனங்களையும் அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் துறைசார் விற்பன்னர்களையும் இணைக்கும் வகையில் திறன்மிக்க ஒரு “வழிகாட்டி மென்பொருள்” வடிவமைக்கப்பட்டு வருகிறது.

சென்னை நந்தனத்தில் புத்தொழில் மையம் - மூன்று மாதத்தில் செயல்படத் தொடங்கும். புதிய "புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை" - விரைவில் வெளியிடப்படும். புத்தொழில் நிறுவனங்களையும் அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் துறைசார் விற்பன்னர்களையும் இணைக்கும் வகையில் திறன்மிக்க ஒரு “வழிகாட்டி மென்பொருள்” வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: 'ஒத்த செருப்புக்கு பிறகு ஒத்த ஷாட் படம்' -'இரவின் நிழல்' படத்தை பார்த்திபனுடன் அமர்ந்து பார்த்த முதல்வர்!