Tamilnadu

திருட்டு பைக்கில் ஆடு திருடிய கும்பல்.. விரட்டி பிடித்த பொதுமக்கள்.. நடந்தது என்ன ?

திருவாரூர் மாவட்டம் இலங்கைசேரி பகுதியை சேர்ந்த அன்புதாஸ் என்ற நபர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தை தப்பலாம்புலியூர் பகுதியில் உள்ள ஒரு கடைவீதியில் நிறுத்தியுள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்க்கையில், அவரது வாகனம் காணாமல் போயுள்ளது. இதையடுத்து காவல்துறையில் தனது வாகனத்தை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார் அன்புதாஸ்.

இந்த நிலையில், நேற்று தப்பலாம்புலியூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஆடுகளை திருடி தப்பிச்சென்றுள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள், அந்த நபர்களை விரட்டியுள்ளனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த அன்புதாஸ், அந்த நபர்கள் தப்பி செல்லும் வாகனம் தன்னுடையது என்பதை உணர்ந்தார்.

இதையடுத்து, அந்த ஊர் பொதுமக்களுடன் சேர்ந்து அன்புதாஸும் அவர்களை பிடிக்க விரட்டிய போது, வேகத்தடையில் நிலை தடுமாறி வாகனத்துடன் அந்த நபர்கள் கீழே விழுந்தனர். பின்னர் அவர்களை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள், காவல்துறையில் ஒப்படைத்தனர். மேலும் அந்த இருசக்கர வாகனம் அன்புதாஸுடையதா என்பதை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

திருட்டு பைக்கில், ஆடு திருடிய திருடர்கள் பொதுமக்களிடம் வசமாக மாட்டிக்கொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வரதட்சணை கொடுக்காததால் நண்பர்களுடன் சேர்ந்து மனைவிக்கு பாலியல் வன்கொடுமை.. - உபி-யில் தொடரும் அட்டூழியம்!