Tamilnadu

2012 அம்மையார் ஆட்சியின் அவலம் : நீதிமன்றம் காட்டிய அதிரடி உத்தரவு !

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் நித்தியராஜ். கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி ஐ.சி.எஃப். காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக போலிஸார் இவரை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் 5 நாட்களுக்கு பின்னர் நித்தியராஜ்க்கு கடும் உடல் நல குறைவு ஏற்பட்டதால் அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இந்த வழக்கு சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நித்தியராஜின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், காவல்துறையினர் தாக்கியதால் தன் மகன் உயிரிழந்தார். அதனால் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசரணைக்கு வந்தபோது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டுமென சி.பி.சி.ஐ.டி போலிஸாருக்கு உத்தரவிட்டார். மேலும் உயிரிழந்த நித்தியராஜ் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் அந்த தொகையை குற்றம்சாட்டப்பட்ட காவல் துறையினரிடம் வசூலிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Also Read: மனைவியோடு சண்டை.. மச்சினி மேல் காதல்..வசியம் செய்ய மந்திரித்த நீரை ஊற்றிய இளைஞர் கைது !