Tamilnadu

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கூலி தொழிலாளி: ஆணழகன் போட்டியில் தங்கம் வென்று அசத்திய தூத்துக்குடி இளைஞர்!

மாலத்தீவில் ஜூலை 15 முதல் 22ம் தேதி வரை 54வது ஆசிய ஆணழகன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆசியக் கண்டத்தில் உள்ள 24 நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து பங்கேற்ற 79 வீரர்களில் 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்த தொடரில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

அதிலும் குறிப்பாகத் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் 75 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் 70 கிலோ பிரிவில் ஹரிபாபு, 90 கிலோ பிரிவில் சரவணன்,100 கிலோ பிரிவில் கார்த்தீஸ்வர் ஆகிய மூன்று பேரும் தங்கம் வென்றுள்ளனர்.

அதேபோல், மாஸ்டர் பிரிவில் ரத்தினம் வெள்ளிப் பதக்கமும், புருஷோத்தமன், விக்னேஷ், ராஜ்குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

கூலித் தொழிலாளியான மாற்றுத்திறனாளி சுரேஷ் தங்கம் வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியில் பங்கேற்ற உதவிய AdityaRam குழும நிறுவனர் ஆதித்யா ராமுக்கு சுரேஷ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

Also Read: “எனக்கு நம்பிக்கை இருக்கிறது”: செஸ் ஒலிம்பியாட் தொடரில் விளையாடாதது ஏன்? - மனம் திறந்த விஸ்வநாதன் ஆனந்த்!