Tamilnadu

4 மாதமாக லிவிங் டு கெதர் - சாப்பாடு செய்யாததால் காதலியை கொலை செய்த கொடூரம்.. நாடகமாடிய காதலர் கைது!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா( வயது 23). இவர் தஞ்சாவூர் பகுதியில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த போது அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார்( வயது 21) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன் மஞ்சுளாவும், சந்தோஷ் குமாரும் சென்னை வந்துள்ளனர்.

சென்னை வந்து சிந்தாதிரிப்பேட்டையில் அக்கா -தம்பி என்று கூறி வீடு எடுத்து தங்கியுள்ளனர். மஞ்சுளா கோயம்பேட்டில் உள்ள தனியார் கால் செண்டரில் வேலைக்கு சேர, சந்தோஷ் வீட்டுக்கு அருகே நூல் நெசவு கம்பெனியொன்றில் பணி புரிந்து வந்துள்ளார்.

சிறிது நாள் இவர்கள் உறவு நன்றாக சென்ற நிலையில், சந்தோஷ் குமார் கஞ்சா அடித்தும், மது அருந்தியும் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும் சந்தோஷ் குமாரின் செயலால் வருத்தத்தில் இருந்த மஞ்சுளா தனது முன்னாள் காதலரிடம் பேச ஆரம்பித்துள்ளார்.

இதை அறிந்த சந்தோஷ் குமார் மஞ்சுளாவை கண்டித்தும் அவரை தாக்கியும் வந்துள்ளார். மேலும், வேலை பார்த்த பணத்தை வீட்டில் கொடுக்காமலும் இருந்துள்ளார். இதனால் மஞ்சுளா இரண்டு நாட்களான சமைக்காமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ்குமார், மஞ்சுளாவிடமும் சாப்பாடு செய்யாதது தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளார். இது முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சந்தோஷ் குமார் மஞ்சுளாவின் கழுத்தை கைகளால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் கழுத்தில் துப்பட்டாவை மாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதை போல செட்டப் செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, தன்னுடன் தங்கி இருந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியபோது மஞ்சுளாவின் முகம் மற்றும் கழுத்து பகுதியில் நக காயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலிஸார் சந்தோஷ்குமாரிடம் விசாரணை நடத்தியபோது மஞ்சுளாவை கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. பின்னர்சந்தோஷ் குமாரை கைது செய்த போலிஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரம்..முதியவரை வெளிநாடு அழைத்து சென்று அடகுவைத்த இளைஞர்..மகள் கண்ணீர் புகார்!