Tamilnadu

பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய சக காவல் அதிகாரிகள்.. காவல் நிலையத்தில் நெகிழ்ச்சி சம்பவம் !

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை அடுத்துள்ள சிறுஞ்சுனை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. அன்னவாசல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் இவரும், புல்வயலை பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கததால், இரு வீட்டாருமே இவர்களுடன் உறவில் இல்லை. இதனால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஜெயந்திக்கு வளைகாப்பு நடத்துவதில் சிக்கல் இருந்தது. இதனை அறிந்த சக காவலர்கள், ஜெயந்திக்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, இன்று (ஜூன் 22), ஜெயந்திக்கு வளையல், சீர் என்று வளைகாப்பு விழாவில் வைக்கப்படும் முக்கிய பொருட்களை வைத்து டி.எஸ்.பி அருள்மொழி அரசு தலைமையில் வளைகாப்பு விழாவை நடத்தினர்.

இதில், ஜெயந்தி - பிரசாந்த் தம்பதியினரை அமரவைத்து, அவர்களுக்கு சந்தனம் பூசியதோடு ஜெயந்தி கைக்கு வளையல் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி ஜெயந்தி, பிரசாந்தை மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: No Parking-ல் நிறுத்தப்பட்ட வாகனம் : உரிமையாளருடன் அலேக்காக கிரேனில் தூக்கிய போலிஸ்! - வைரலாகும் வீடியோ !