Tamilnadu

7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : டியூசன் ஆசிரியை அவரது காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!

சென்னை தி.நகர் பகுதியில் 29 வயது ஆசிரியை ஒருவர், தன்னுடன் டியூஷன் படித்து வந்த 7வது படிக்கும் சிறுமியை தனது காதலருடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிக்கு காரில் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அந்த சிறுமியை ஆசிரியையின் காதலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுமியை மிரட்டி, ஆசிரியை தங்க நகை மற்றும் பணம் பெற்று வந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர், தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி ஆசிரியை மற்றும் காதலரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலெட்சுமி முன் நடைபெற்றது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குற்றச்சாட்டுகள் நிரூபணமாவதாக கூறி, டியூஷன் ஆசிரியை மற்றும் அவரது காதலருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் டியூஷன் ஆசிரியைக்கு 70 ஆயிரம் ரூபாயும், காதலருக்கு 60 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Also Read: ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவி படுகொலை.. புதுச்சேரியில் நடந்த கொடூரம் - போலிஸ் தீவிர விசாரணை!