Tamilnadu

கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து விற்பனை.. ஆன்லைன் மூலம் வியாபாரம்.. அ.தி.மு.க நிர்வாகி கைது!

ராமநாதபுரம் மாவட்டம் கீழசீதை வீதியை சேர்ந்தவர் அஜய்குமார். இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். தனியார் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கி கல்லூரிக்கு சென்று வந்த இவர் கடந்த 13 ம் தேதி விடுதி அறையில் வாந்தி மயக்கம் எடுத்து மயங்கியுள்ளார்.

உடனடியாக அவரை மீட்ட சக மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்த நிலையில் உயிரிழந்த மாணவரின் உடல்கூறாய்வு முடிவு வெளிவந்தது.

அதில், அவர் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திக் கொண்டதும், அதனால் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்ததால் இருதயம் செயலிழந்துு உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் மாணவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இதை தொடர்ந்து செய்து வருவதும் தெரியவந்தது.

மாணவர் மரணம் தொடர்பாக சக மாணவர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தியதில், கும்பகோணத்தில் மருந்தகம் நடத்தி வரும் முகமது பசீர் (52) என்பவர் மருத்துவரின் பரிந்துரையின்றி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

பின்னர் கும்பகோணம் சென்ற போலிஸார் மாணவர்களுக்கு போதை மருந்து விற்பனை செய்த முகமது பசீரை கைது செய்து சிறையில் அடைந்தனர். முகமது பசீர் அ.தி.மு.க நிர்வாகி என்பதும், அவர் மாவட்ட அம்மா பேரவை துணை அமைப்பாளராகவும் உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Also Read: "வாழவே விட மாட்டோம் என்கிறது ஒன்றிய அரசு! மாநிலங்களின் ஒன்றுபட்ட குரல் தேவை" - சு.வெங்கடேசன் எம்.பி!